Sunday 21 October 2012

சிறிய மிட்டாய் தொடங்கி ஸ்டார் ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் சிக்கன் வரை
கண்ணைக் கவரும் கலராய் இருந்தால்தான் கவனம் ஈர்க்கிறது. அந்த நிறத்தின் அழகில்
மயங்கி அதை வாங்கி உட்கொள்பவருக்கு உடல்ரீதியான குடல் ரீதியான பாதிப்புகள்
ஏற்படுகிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

கடைகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், ஸ்வீட், ஜாம், கேக் வகைகள்
பிஸ்கெட்டுகள், ரோஸ்மில்க் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் குழந்தை
உணவுகள், கேசரி போன்றவற்றில் அளவுக்கு அதிகம் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இந்த
ரசாயனங்கள் பெரும்பாலும் நிலக்கரி தாரிலிருந்தும், பெட்ரோலில் இருந்தும்
பிரித்து எடுக்கப்பட்டு உணவு பொருட்களில் சேர்க்கப்படுகின்றன.

இவைகளை தொடர்ந்து நீண்ட காலம் சாப்பிட்டு வந்தால் உயிருக்கே பேராபத்தாக
மாறிவிடும் அபாயம் உள்ளது. ரசாயனங்களினால் ஆஸ்துமா, சோரியாசிஸ், தோல் அலற்சி,
நரம்பு மண்டலம் பாதிப்பு, குடல்புண், குடல் புற்றுநோய், சிறுநீரக கோளாறு,
வயிற்றுவலி, சைனஸ், சிறுநீரக கட்டி, ரத்தக்குழாய் சுருங்குதல், வாந்திபேதி,
மூளையில் கட்டி, ரத்த அழுத்தம், குறை பிரசவம், ஆட்டிசம், குறைபாடான குழந்தை
பேறு போன்ற நோய்கள் உண்டாகிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

பெரும்பாலான கடைகளில் விற்கப்படும் சிக்கன் 65, மீன் வறுவல்கள் பார்க்கும்
போதே சாப்பிட வேண்டும் என்று ஆசையை ஏற்படுத்தும் சிவப்பு நிறத்தில்
தருகின்றனர். இந்த சிவப்பு நிறத்துக்காக அளவுக்கதிகமாக கேசரி பவுடர்
சேர்க்கப்படுகிறது. சில இடங்களில் பஜ்ஜி, போண்டாவிலும் சேர்த்து நிறம்
உண்டாக்கப்படுகிறது.

இப்படி ரசாயனம் சேர்க்கப்பட்ட சிக்கன் 65, மீன் வறுவல் சாப்பிடுவது பணம்
கொடுத்து நாமே நோயை வாங்குவதாகும். இவைகளை சாப்பிட்டால் குடல் கேன்சர்,
சோரியாசிஸ் ஆஸ்துமா, வயிற்றுப்போக்கை உண்டாக்கும் நாளடைவில் உயிருக்கும்
வேட்டு வைத்து விடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

அதேபோல் கேக்குகளின் கிரீம்களில் உள்ள ரசாயனங்கள் பச்சிளம் குழந்தைகளின்
உடல்நலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

கர்ப்ப காலத்தில் பெண்கள் குளிர்பானங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
என்பது மகப்போறு மருத்துவர்களின் அறிவுரையாகும். ஏனெனில் கர்ப்ப காலத்தில்
குளிர்பானங்களை குடிப்பதால் அதில் உள்ள ரசாயனங்கள் கருவில் உள்ள குழந்தைகளை
பாதிக்கின்றன. இதனால் பிறக்கும் குழந்தை, ஆட்டிசம் மற்றும் மளவளர்ச்சி
குறைபாட்டுடன் பிறக்கும் வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே கண்ணைக் கவரும் நிறங்கள் கொண்டு உணவுகள் மீதான கவனத்தை குறைந்து
இயற்கையான உணவுகளை உண்பதற்கு ஆர்வம் காட்டவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்
நிபுணர்கள்.

No comments:

Post a Comment