Tuesday 16 October 2012

மார்பக புற்றுநோய் பற்றிய தகவல்

மார்பக புற்றுநோய் பற்றிய தகவல்:-

பெண்கள் அனைவரது மனதிலும் எழும் ஒரே கேள்வி , ஏன் தற்போது மார்பகப் புற்றுநோய் பற்றி அதிகம் பேசப்படுகிறது. தாயாருக்கு இருந்தால் மகளுக்கு கண்டிப்பாக வருமா? பாரம்பரிய ரீதியாக வருமா ? எந்த வயதில் அதிகம் வரும்? இப்படி மார்பகப் புற்றுநோய் பற்றி பல கேள்விகள்..

இவற்றுக்கான விடைகளைப் பார்ப்போம்.

சாதாரணமாக 35 வயதுக்கு மேல் உள்ள பெண்களையே அதிகம் இந்த மார்பகப் புற்றுநோய் தாக்குகிறது. மற்றும் மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகு இந்த நோய் தாக்கும் சதவீதம் அதிகம். மார்பக புற்று நோய் பெண்களைத் தாக்கும் புற்று நோய்களில் இரண்டாம் இடத்தை ஆக்கிரமித்து உள்ளது. முதலிடத்தில் இருப்பது கருப்பை வாய் புற்று நோய்தான்.

மார்பகப் புற்றுநோயின் காரணம் இதுவரை அறியப்படவில்லை. ஆனால் சில காரணிகளை (risk factors) அடையாளம் கண்டுள்ளனர். அவைகளில் சில
* பாரம்பரிய ரீதியில் வருவது.
* ஹார்மோன் செயல்பாடுகளின் கோளாறால் வருவது.
* கொழுப்பு நிறைந்த உணவை அதிகம் உண்பதால்.
* மது அருந்துவது.
* குறுகிய காலத்தில் உடல் அதிக பருமன் அடைவது
* சுற்றுப்புற சூழல் பாதிப்பால் - கதிரியக்க வீச்சு அதிகமாக உள்ள இடங்களில் வாழ்பவர்களுக்கு
* புகையிலை உபயோகிப்பவர்களுக்கு.
* குடும்பத்தில் பெண்ணின் தாய்க்கோ, பாட்டிக்கோ கூட பிறந்த சகோதரி இவர்களுக்கு 40 வயதுக்கு மேல் மார்பக புற்றுநோய் வந்திருந்தால் இவர்களுக்கும் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அறிந்துள்ளனர்.
* அடிக்கடி கருக்கலைப்பு செய்பவர்களுக்கு. அதிக சதவீதம் மார்பகப் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது.
* குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்தலும், மிகக் குறைந்த காலமே பால் புகட்டினாலும் இந்த நோய் தாக்கலாம். வேறு விதமாகவும் பால் சுரக்காதவர்கள், பால் கொடுத்தால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.

அறிகுறிகள்
முதல் கட்ட நிலையில் எந்த அறிகுறிகளும் தெரிவதில்லை. இரண்டாம் கட்ட நிலையில் மார்பகத்தில் வலியில்லாத கட்டிகள் காணப்படுதல், மார்பக தோல் கடினமாவது, காம்புகள் உள் இழுத்துக்கொள்வது.

மார்பக காம்புகளில் இருந்து திரவம் வடியும். வலி வேதனை உண்டாகும்.

அக்குள் போன்ற பகுதிகளில் நெறிகட்டி உருவாகுதல், சீராக எடை குறைதல் போன்ற சில அறிகுறிகள் தென்படலாம்.

எவ்வாறு கண்டறிவது
மேற்கண்ட அறிகுறிகள் சாதாரணமாக தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி மார்பை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

1. மார்பக பரிசோதனை

2. மேமோகிராம் (mamogram)

40 வயதுகளில் உள்ளவர்கள் வருடத்திற்கு ஒரு முறையேனும் இந்த பரிசோதனை செய்து கொண்டால் ஆரம்ப நிலையில் உள்ள புற்று நோயை அறிய முடியும். பூரணமாக குணப்படுத்தவும் முடியும்.

3. Ultrasound பரிசோதனை

4. Biopsy பரிசோதனை

நோயை கண்டறிந்துவிட்டால் தற்போதுள்ள நவீன சிகிச்சையால் சரி செய்துவிடலாம். முன்பெல்லாம் பாதிக்கப்படும் மார்பகத்தையே நீக்கும் நிலை இருந்தது. இப்போது கட்டி சிறியதாக இருந்தால் கட்டியை மட்டும் ஆபரேஷன் மூலம் நீக்கி மார்பக அழகில் எந்த மாற்றமும் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த நோய் வராமல் தடுப்பது எப்படி?
கல்யாணமான பெண்கள் குழந்தை பெறுவதை தள்ளிப்போடக் கூடாது. சாதாரணமாக 22 வயதிலிருந்து 28 வயதிற்குள் முதல் குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைக்கு தாய்ப்பால் ஒரு வயதிற்கும் குறையாமல் கொடுக்க வேண்டும். அடிக்கடி கரு கலைக்கும் எண்ணம் இருந்தால் விட்டுவிட வேண்டும். உடல் எடையை எப்போதும் அதிகமாக விடாமல் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். மார்பகத்தை போகப்பொருளாக பயன்படுத்த விடக்கூடாது.

சீரான உடற்பயிற்சி இதற்கு மிகவும் தேவை
மது அருந்துவது, புகை பிடிப்பது, கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது போன்ற பழக்கங்களை அறவே ஒழிக்க வேண்டும்.

40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஒரு முறையேனும் மார்பக பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் இந்த நோயை ஆரம்பக்கட்ட நிலையிலேயே கண்டுபிடிக்க முடியும். முற்றிலுமாக குணமாக்கவும் முடியும். இதனால் புற்றுநோயால் இறப்போரின் எண்ணிக்கையை குறைக்கவும் முடியும்.

மார்பகங்களில் நீர்கோர்த்து கனத்து வலி ஏற்பட்டால், மல்லிகப்பூவை அரைத்து இரவு மார்பகங்களில் பூசிவர வலி நீங்கும்.

நன்றி:- நக்கீரன்.காம்

No comments:

Post a Comment